பன்னிரெண்டாம் பதிப்பில் அடியெடுத்து வைத்துள்ள ஐ.பி.எல்லும், கிரிக்கெட் அட்டவணையில் அதன் இடம் குறித்த கவலையும்

Image result for ipl 2019 logo

இந்தியன் ப்ரீமியர் லீக், அது தொடங்கப்பட்ட 2008-ஆம் ஆண்டு முதலே கோடைகால விளையாட்டுத் திருவிழாவாக ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு பக்கம், இருபது ஓவர் போட்டிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என கிரிக்கெட் ஆர்வலர்கள் வாதிட்டாலும், மறு பக்கம் எவராலும் ஐ.பி.எல்லின் புகழையும், மகத்துவத்தையும் மறுக்க முடியாது. இத்தொடரின் பன்னிரெண்டாம் பதிப்பின் முதல் போட்டியில் கடந்த சனிக்கிழமையன்று நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மண்ணில் முதல் வெற்றியை ருசித்தது. இம்முறை ஐபிஎல் திருவிழாவானது இந்தியா முழுவதும் பல்வேறு மைதானங்களில், 60 போட்டிகளைக் கொண்ட தொடராக நடைபெறுகிறது. இந்தாண்டு ஏழு கட்டமாக ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்றதேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐபிஎல்லில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானத்தில் போட்டிகளை விளையாட திறம்பட வழிவகை செய்துள்ளது. சிக்ஸர் மழை, ரன்னில்லா பந்துகள் மற்றும் கட்டுக்கடங்கா ரசிகர்களுடன், இந்தாண்டு ஐ.பி.எல் மற்றொரு பெரிய சவாலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மே 12-ஆம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் நிறைவடைந்தவுடன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மிகப்பெரிய போட்டிக்காக விளையாட்டு வீரர்கள் ஆயத்தமாக வேண்டியுள்ளது. மே 30-ஆம் தேதி ஓவல் மைதானத்தில் தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட்டின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியுடன் ஜூன் 5-ஆம் தேதி மோதுகிறது. ஆனால், இதற்காக முழுவதும் தயாராக இந்திய அணிக்கு போதிய கால அவகாசம் இல்லை.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் இடைவேளை ஏதுமின்றி ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதுடன், இந்தியாவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி-20 தொடர்களிலும் பங்கேற்றனர். அதன்பின், ஐபிஎல்லில் விளையாடும் அவர்கள், பிறகு உலகக்கோப்பையிலும் விளையாட உள்ளதால், இப்போது மீண்டும் “வீரர்களுக்கு அதிக முக்கியமானது தாய்நாடா அல்லது தங்களது ஐபிஎல் அணியா?” என்ற வாதம் மேலோங்க தொடங்கியுள்ளது. அதனோடு, இந்திய அணியின் முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரின்போது காயம் அடைந்தால், அது இந்தியாவின் உலகக்கோப்பை கனவை தகர்க்குமோ என்கிற அச்சமும் நிலவுகிறது. இந்திய தேசிய அணியின் தேர்வாளர்கள், ஐபிஎல் தொடரானது புதிய திறமைசாலிகளைக் கண்டறிய உதவுவதுடன், இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் உலகக்கோப்பைக்கான உரிய உடல் தகுதியுடன் விளங்குவதையும் உறுதிப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் பி.சி.சி.ஐயும், இந்திய தேசிய அணியின் நிர்வாகமும் ஐபிஎல் அணிகளின் முதலாளிகளிடம் முக்கிய வீரர்களின் பணிச்சுமையை சரியாகக் கையாளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும், இந்த திட்டமானது எந்தளவிற்கு பலனளிக்கும் என்கிற ஐயமும், வீரர்களுக்கு ஏற்படும் உடல்சோர்வு குறித்த அச்சமும் இன்றளவும் நிலவுகிறது என்பதே நிதர்சனமான உண்மை. இந்த குழப்பங்களின் மத்தியிலும், ஐபிஎல் போட்டியானது பல இளம் வீரர்களுக்கு, உலகக்கோப்பையில் பங்குபெறும் அரிய வாய்ப்பினை உருவாக்கித் தந்துள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் கூற்றுப்படி- “உலக தரத்திலான உள்ளூர் போட்டி” ஆக விளங்கும் ஐபிஎல் போட்டியானது பாகிஸ்தான் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க மறுத்து வருவது, அதன் அமைப்புரீதியிலான கொள்கைகள் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இவ்வாறு அரசியலும், வியாபாரமும் ஒருங்கே ஐபிஎல்லில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

Comments