Freelance English to Tamil subtitling work done for 'Phenomenal Travel' youtube channel

Video name: 'IN SEARCH OF THE FORBIDDEN PAST: EPISODE-2'
Source video link: https://youtu.be/TTCWEst943o



அன்பு நேயர்களே,

கடந்த காணொளியில், என்னிடம் காட்டுவாழ் பழங்குடியினர், 100 மைல்சுற்றுப்புறத்தில் ராட்சத பிளவு பாறையை கண்டுபிடிக்க முடிந்தால் நாகர்கள் அல்லது வாலையர்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடியும் என்று கூறினார்கள்.

அவர்கள் அந்தப் பிளவு பாறைக் குறித்து அவர்களின் மூதாதையர்கள் மற்றும் முந்தைய தலைமுறையினரிடம் இருந்து கேள்விப்பட்டிருந்தாலும், அது இருக்கும் இடம் குறித்து அறிந்து இருக்கவில்லை.

என்னால் பல ராட்சச பிளவு பாறைகளை உலகெங்கிலும் காண முடிந்தாலும், கூகுளின் மூலம் ஜவ்வாது மலையினை சுற்றியுள்ள நூறு மைல் பகுதியில் எந்த பாறையையும் கண்டுபிடிக்கமுடியவில்லை.
எனவே நானாகவே 100 மைல் சுற்றளவில் உள்ள பாறைப்பகுதிகளைத் தேடிச் செல்ல போகிறேன். என் தேடல் என்னை அலைக்கழிக்கிறது. நான் உலகின் மிக ஒதுக்கப்பட்ட- மரம், கட்டிடம், மனிதர்கள் இல்லா இடங்களில் தேடி அலைகிறேன். அந்த ராட்சச பிளவு பாறையை இங்கு எங்காவது நான் காண்பேனா?
என்னால் பாறை இருப்பதற்கான எந்த ஒரு அறிகுறியையும் காண முடியவில்லை.

பல நாட்கள் தேடுதலுக்குப்  பிறகு நான் மிகவும் சுவாரசியமான ஒன்றினை கண்டு பிடித்தேன்.
பழங்குடியினர் அவர்களை வாலையர்எனக் கூறியது நினைவுள்ளதா?
வாலையர்பெயரினைக் கொண்டு சில இடங்கள் பெயரிடப்பட்டுள்ளன. கீழ்வாலை மற்றும் மேல்வாலை என்னும் இரண்டு கிராமங்கள் உள்ளதாகவும், வலையர் என்னும் தெய்வங்கள் மனிதர்களுடன் முதலில் தொடர்பு கொண்டு இந்த 2 கிராமங்களை உருவாக்கியதாக கூறி வருகின்றனர்.
இது தான் கீழ்வாலை கிராமம். நாம் தேடி வந்த பிளவுப் பாறை இப்பாறைப் பகுதியின் எங்கோ தான் உள்ளது என்று ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் அந்தப் பிளவுப் பாறையைத் தமிழ் மொழியில் ரத்தக் கல் என்றும் அதன் பின் ஒரு வினோத கதை அடங்கி இருப்பதாகவும் கூறுகின்றனர். அதனை நான் உங்களுக்குச் சில நிமிடங்களில் சொல்கிறேன்.

திடீர் என்று, சற்றுத் தொலைவில், நான் ஒரு மாபெரும் பாறை, தெய்வீக சக்தியால் இரண்டாய் பிளந்ததைப் போல் இருப்பதைக் கண்டு வியந்தேன்.
அந்தப் பாறை தான் நாம் தேடி வந்த பழங்குடியினரால் குறிப்பிடப்பட்ட பாறையாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. முக்கியமாக, அந்த பாறையின் அடிப்பகுதியைச் சுற்றி ஓர்உலோக வேலி போடப்பட்டிருந்தது.
அது ஒரு நல்ல அறிகுறி.

ஏதோ முக்கியமான ஒன்று அங்கு இருக்க வேண்டும். அதனால் தான், அவர்கள் அந்தப் பெரிய வேலியை அங்கு அமைத்து உள்ளார்கள். கண்டிப்பாக, நில அமைப்பியல் வல்லுநர்கள் அந்தப் பாறை இயற்கையாகவே இரண்டாகப்பிளந்திருக்கும் என்று அறுதியிட்டுக் கூறுவார்கள். ஆனால் அது உண்மையிலேயே இயற்கை நிகழ்வா?

அல்லது அதனை மனிதர்கள் செய்திருக்க இயலாது என்பதால் அது இயற்கையாய் நடந்தது என்று நாம் நம்மையே நம்ப வைத்துக்கொள்ள முயற்சிக்கிறோமா?

அது ஒருவேளை வாலையர் அல்லது நாகர்களின் மேம்பட்ட தொழில்நுட்பத்தால் பிளக்கப்பட்டதா?
அதனை நாம் மேலிலிருந்து பார்த்தால், அது மிக துல்லியமான வெட்டாக, யாரோ ஒரு ரொட்டியினை இரண்டாக வெட்டியதைப் போல் தெரிகிறது!

அந்த வெட்டு மிக நேர்த்தியாக இருப்பதைக் காணும் போது அது இயற்கையாய் நிகழ்ந்து இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
இந்த ராட்சச பிளவுப் பாறைகளின் இடையே நடந்து செல்லும் என் அனுபவத்தை விவரிக்க வார்த்தையில்லை என்பதே உண்மை.

தரைப்பகுதியில் இருந்து பார்க்கும்போது அந்தப் பாறையானது, அளவில் பெரியதாகவும் வீடாகவோ, தங்குமிடமாகவோ அல்லது தூங்கும் இடமாகவோ பயன்படுத்திக் கொள்ள உகந்ததாகத் தெரிகிறது.
இரண்டு ரொட்டி துண்டுகளின் இடையில் சிக்கிய எறும்பினைப் போல் நான் உணர்ந்தேன்.
அது ஒரு வேளை ஒரு பாதுகாப்பு பெட்டகமாகவோ அல்லது மறைவிடமாகவோ இருந்திருக்குமோ?
இந்த முழு அமைப்பு 50 அடி உயரம் கொண்டதாகவும், 60 அடி அகலம் கொண்டதாகவும், அந்த இரண்டு பாறைத்துண்டுகள் ஒரு பெரிய பறவையின் சிறகுகள் போன்றும் காட்சியளிக்கிறது.
கிராமத்துவாசிகள் அவற்றைப்பற்றி வினோத கதைகளை வைத்துள்ளனர்.
அவர்கள் இதனை ரத்தக் கல் என்றும், அந்தப் பாறையின் மேல்பகுதியில் ஒரு ரகசிய துவாரம் இருப்பதாகவும், அதனை ஒரு பாறைத்துண்டுமூடியிருப்பதாகவும், அந்த துவாரத்தின் வழியே அவ்வப்போது ரத்தம் பீறிட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

நாம் அந்தப் பாறையை உற்று நோக்கினோம் என்றால், அந்தச்சிவப்புநிற திரவத்தின் அடையாளங்களைக் காணலாம். அது பார்ப்பதற்கு வாகன எண்ணெய் போன்றே காட்சியளிக்கிறது.
பாறைகள் பொதுவாகவே நீரினை உறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவை. அவை சில சமயங்களில் அவ்வாறு உறிந்து வைத்துள்ள நீரினை மற்ற பாறைப்பொருட்களோடு சேர்த்து வெளியேற்றும். அதனையே உள்ளூர் மக்கள் ரத்தம் என எண்ணி இதனை ரத்தப் பாறை என அழைக்கின்றனர்.
ஆனால், எது ஆச்சரியமளிக்கிறது என்றால்,  பாறையின் மேல் ஒரு துண்டுப்பாறை மூடி போல காட்சியளிப்பது தான்!

இப்பொழுது, பிரச்சினை என்னவென்றால், அந்தக் கிராமத்தவர்கள் அந்தப் பாறையின் மீது ஏறி, அதன் மேல் என்ன உள்ளது என்பதைக் காண வாய்ப்பே இல்லை.
என்னால் இதனை பறக்கும் புகைப்படக் கருவியின் மூலமே உங்களுக்கு படம் பிடித்து காட்ட முடிந்தது.
ஆனால், அந்த ஊர்மக்களுக்கு இந்த மூடுபாறையினைப் பற்றிப் பார்க்காமலே எப்படித் தெரியவந்தது?
முக்கியமாக, ஜவ்வாது மலையில் வாழும் பழங்குடியினருக்கு எவ்வாறு இந்தப் பிளவுப் பாறையைப் பற்றித்தெரிந்தது?அதுவும், தாங்கள் வாழும் காடுகளை விட்டு வெளியே வராமலே?
சரி, அந்த வேலியின் உள்ளே என்ன உள்ளது?
ஆள்-அரவம் இல்லாத இந்த வெட்ட வெளியில் உள்ள பாறையினைச் சுற்றி வேலி அமைப்பதற்கான அவசியம் என்ன?

அகழ்வாராய்ச்சி துறையின் ஒரு சில குறிப்பு பலகைகளைக் காணலாம்.
நான் என் புகைப்படக் கருவியை வேலியை நோக்கி எடுத்துச் செல்லும்போது, குகை ஓவியங்கள் உள்ளே இருப்பதை உணர்ந்தேன்.
இந்தக் குகை ஓவியங்கள் வாலையர் மற்றும் நாகர்கள் வாழ்ந்ததற்குச் சான்றாகவும், அவர்களைக் குறித்துப் புரிந்து கொள்ளும் கருவியாகவும்  விளங்குகின்றன.

ஆனால் நான் உள்ளே எவ்வாறு சென்றடைய போகிறேன்? சுற்றுப் பகுதியில் எந்த வாயில்காப்பாளரோ, கைப்பேசியில் அழைப்பதற்கான குறிப்புப் பலகையோ காணப்படவில்லை.
அகழ்வாராய்ச்சி துறை இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பொக்கிஷத்தைபாதுகாக்க போராடி வரும் நிலையில், தங்கள் பெயர்களை அவற்றின் மீது எழுதி ஒருசில கயவர்கள்அதனைஅழித்து வருகிறார்கள்.
ஒரு பழம்பெரும் பாறை ஓவியத்தின் மீது எவ்வாறு தங்கள் பெயர்களை எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்…

இதற்காகவே அகழ்வாராய்ச்சி துறை ஒரு பெரிய வேலியை இப்பகுதியை சுற்றி அமைத்துள்ளார்கள்.
நான் அவ்வேலியை புகைப்படக் கருவியின் மூலம் உள்நோக்கியபோது, என்னால் ஒரு விசித்திர குகை ஓவியத்தைக் காண முடிந்தது. அது மிகவும் அற்புதமாய் இருந்தது.
அந்தப் புகைப்படம் சற்றுத் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டு இருந்ததால், படம் தெளிவாக இல்லை.
நான் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அந்தப் படத்தின் வண்ணம் மற்றும் ஒளி அளவினை மெருகேற்றி பார்த்தபோது, ஓர் அற்புதமான படம் தென்பட்டது.
ஒரு பெரிய வட்டத்தினுள் சிறிய வட்டம் காணப்பட்டது.
ஒரு குச்சி வடிவிலான உருவம் உள்ளே அமர்ந்து இருந்தது.

அதற்கு அடுத்து அதே போன்று, ஒரு வட்டத்திற்குள் ஒரு குச்சி வடிவ உருவம் காணப்பட்டது.
இவை வேற்றுகிரக வாசிகளைத் தாங்கியுள்ள பறக்கும் தட்டு வாகனங்களாக இருக்க வாய்ப்புள்ளதா?
ஒவ்வொரு சிற்பத்திலும் ஒரு சிறிய இணைப்பு ஒரு சில வரிகோடுகளுடன், பார்ப்பதற்கு ஒரு ஏணியைப்  போலவே காட்சியளிக்கிறது.
இது என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

என்ன ஆச்சரியம் என்றால், இது வானத்தில் காணப்படுகிறது. மேலும் 2 மனிதர்கள் தரைப்பகுதியில், குச்சி உருவத்தில் சிறிய தலைப்பகுதியுடன் காணப்படுகிறார்கள்.
இந்த மனிதர்கள் மேலே உள்ள பறக்கும் தட்டினை சுட்டிக்காட்டிக் கொண்டே ஓடுவதும் தெரிகிறது.
அந்த விண்கலத்தினைச் சுற்றி, தூசி அல்லது புகை போன்ற சிறிய கோடுகள் பறந்து கொண்டிருப்பதும் தெரிகிறது.
இந்த ஓவியத்தை குகைவாசிகள், வாலையர் வானத்தில் இருந்து கீழ்  இறங்கியதை பார்த்த போது வரைந்திருக்கலாமோ?
அவர்கள் உண்மையில் பறக்கும் தட்டு போன்ற விண்கலத்தில் வந்தார்களா?
மேலும் ஆச்சரியம் என்னவென்றால், நாம் இங்கே பார்க்கும் இவ்வோவியங்கள் ‘ஒனக்கே கிண்டி’ என்னும் இடத்தில் நான் 2 ஆண்டுகளுக்கு முன் பார்த்த குகை ஓவியங்களைப் போன்றே காணப்படுவது தான்.

ஒனக்கே கிண்டி கீழ்வாலையிலிருந்து 400 மைல் தொலைவில் உள்ளது. அப்பகுதி இந்தியாவின் பல பழங்கால பாறை ஓவியங்களைக் கொண்டுள்ளது.
அந்தப் பகுதியில் காணப்படும் ஓவியம் மிகவும் அழகாகப் பறக்கும் தட்டையோ அல்லது விண்கலனையோ தெளிவாய் காட்டுவதுடன், அவற்றை ஒரு வட்டத்திற்குள் இன்னொரு வட்டமாகவும், 2 உருவங்கள் ஒரு ஏணி போன்ற பொருளை தூக்கிச் செல்வதைப் போலவும் காட்சிப்படுத்தி உள்ளது.
ஒருவேளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குகைவாசிகள், அக்காலத்தில் வருகை புரிந்த பழங்கால விண்வெளிவீரர்களைக் கண்டு இந்த ஓவியங்களைப் படைத்தார்களா?
இதை வேறு எவ்வாறு விளக்குவது?

பெரும்பாலான முற்காலத்துப் பகுதிகளில், நாம் ஒரு தனிப்பட்ட ஓவியம் வரைந்த பாறையினைப் பார்ப்பதில்லை. அதனோடு, பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்ட பலபாறைகளையும் சேர்த்தேஅதே இடத்தில் காண்போம்.

எனவே நான்மற்ற பாறை ஓவியங்களையும் தேடி கண்டறிய வேண்டும்.
நான் தொங்குப்பாறைகளையும், பாறை உறைவிடங்களையும் தேடுகிறேன்.
இந்த இடத்தைப் பாருங்கள். இந்தியா ஒரு பெரும் ஜனத் தொகையைக் கொண்ட நாடு. ஆனால், இந்த இடத்தில்  ஒரு வீடு கூட அருகில் இல்லை.
கடந்த காணொளியில், நாம் ஜவ்வாது மலை எப்படி முற்றிலும் ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ளது எனப் பார்த்தோம்.
ஏன் இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பகுதிகள், சென்றடைவதற்குச் சிரமமான இடங்களில் அமைக்கப்படுகின்றன?
இந்தப் பகுதியில் பழம் காய்க்கும் மரங்கள் ஏதும் இல்லை. மேலும், இப்பகுதி நிலம் எந்தப் பயிர்களையும் விளைவிப்பதில்லை.
உள்ளூர் மக்கள் தங்கள் கடவுளான நாகர்கள், தங்களுக்குக் கால்நடை வளர்ப்பினை கற்றுத் தந்ததாகக் கூறுகின்றனர். மேலும் அவர்கள், நாகர்கள் படகுகளைக் கண்டுபிடித்ததாகவும், மனிதர்களுக்கு ஆறுகள் மற்றும் கடல் பரப்புகளில் எவ்வாறு பயணம் செய்வது எனக் கற்றுக் கொடுத்ததாகவும் கோருகின்றனர்.
நான் தொடர்ந்து நடக்கும்போது, ஒரு நல்ல குறியீடினை பார்த்தேன். ஒரு தொங்குப் பாறையினைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த வேலி முழுவதுமாய் அமைக்கப்படவில்லை. ஆதலால், எனக்கு உள்ளே செல்ல ஒரு வழி கிடைத்தது.
அதன் உள்ளே பல பாறை ஓவியங்கள் நிறைந்துள்ளன. ஆனால், நீங்கள் பார்ப்பதைப் போல் அதன் உள்ளே செல்வது கிட்டத்தட்ட சாத்தியமில்லா செயல்.
இத்தகைய பகுதிகளை நாம் தவழ்ந்து தான் கடக்க முடியும்.
அதுவும் நான் மிக குறுகிய பகுதியில் செல்ல வேண்டியதாய் இருந்தது.
என் கையில் என்ன உள்ளது?
ஒரு தெளிக்கும் புட்டியும் கொஞ்சம் வடிகட்டிய தண்ணீரும் மட்டுமே.
அது எனது பயணப் பையில் எப்போதும்ஒரு அங்கம். நான் அதனை எப்போதும் என்னுடன்எடுத்து செல்வேன்.

நீங்கள் எப்போதாவது குகை ஓவியங்களையோ பாறை கலை படைப்புகளையோ காண நேர்ந்தால், அவற்றைப் பார்ப்பதற்கான சிறந்த வழி அவற்றின் மீது வடிகட்டிய நீரினை தெளிப்பதே ஆகும். முக்கியமாய், அவற்றை உங்கள் கைகளால் தொடாதீர்கள்.
நான் நீரினை தெளிக்கத் தெளிக்க, மெல்லமெல்ல ஓவியங்கள் தோன்ற தொடங்கின.
இந்த இடம்2 பேருக்குப் போதுமானதாக இல்லாததால், நான் என் நண்பனிடம் இருந்து புகைப்படக் கருவியினைப் பெற்றுக் கொண்டேன்.
நான் என்னால் முடிந்த வரை சிறப்பாய் முயற்சி செய்து, உங்களுக்கு அதன் தோற்றத்தினைக்காட்ட முயலப் போகிறேன்.
நான் மேலும் மேலும் நீரினை தெளிக்க, இது அகழ்வாய்வாளர்களின் புதையல் பெட்டகம் எனப் புரிந்தது. ஒன்று அல்லது இரண்டு ஓவியங்கள் அல்ல, இந்த முழுப் பாறையும் ஆதிகாலத்து கலைப்படைப்புகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
இந்த உருவம் பார்ப்பதற்கு வேற்று கிரக ஜீவராசி போலவே உள்ளது.
முதலில் ஒன்றும் இல்லாதது போல் தெரிந்தாலும்,  நான் நீரினை தெளிக்கும்போது மெல்ல மாயம் நிகழ தொடங்கியது.

நான் நீரை தெளிப்பது மேலும் தொடரும்போது மேலும் பல ஓவியங்கள் தோன்றின.
நான் கடினமாய் உழைப்பதாய்  உங்களுக்குத் தோன்றினால், இந்த ஓவியங்களை வரைந்தவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்  எனக் கற்பனை செய்து பாருங்கள்.
வரலாற்றாளர்களும், அகழ்வாய்வாளர்களும் உரைப்பது சரி என்றால், அவன் ஒரு குகை மனிதனாய்  இருந்து இவ்வோவியங்களைத் தனது வெறும் கைவிரல்களால் வரைந்து  இருக்க வேண்டும்.
பல ஓவியங்கள் தெளிவாய் இல்லாமலும், ஒரு சில வினோதமான உருவங்களைக் கொண்டதாகவும் விளங்கின.

அவற்றுக்கு நீளமான தலைப்பகுதியும் ஒரு சிலவற்றுக்கு இறக்கைகளும் இருப்பது போல் தோன்றின.
இரண்டு சின்னங்கள் மிகவும் சுவாரசியமாகத் தெரிந்தன.
ஒன்று உடுக்கைஎன்னும் இசைக்கருவியைப் போல் காட்சியளிக்கும் இது.
உடுக்கை உலகிலேயே மிகப் பழமையான இசைக்கருவி ஆகும். அதன் இசை,கேட்பவர்களை தங்களை மறந்த நிலைக்கு இட்டுச் செல்லும் சக்தி படைத்தது.
மற்றொரு சின்னம் ஒரு துப்பாக்கிக்  குறிபோன்றும், ஒரு வட்டத்தில் இரண்டு கோடுகள் செங்கோணத்தில் சந்திப்பது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
நாம் அதனைச் சக்கரம் என்றும் அழைப்போம்.

ஆனால் இந்தச் சின்னங்களை அதனை உருவாக்கியவர் என்ன பொருள்பட ஏற்படுத்தினார் என எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.
இது ஒரு அற்புதமான இடம், ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தப் பாறை ஓவியங்கள் தெளிவாக இல்லாமலும், ஒரு சில பகுதிகள் மங்கி போகியும் உள்ளன.
இதனை எக்ஸ்-கதிர் தொழில்நுட்பத்தின் மூலம் ஆராய்ந்தால் மட்டுமே நம்மால் மேலும் தெரிந்து  கொள்ள முடியும்.

இதற்குள் தவழ்ந்து செல்வது கடினம் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.
அதை விடமிகவும் சிரமமானது, இதை விட்டு வெளியே வருவது தான், இதற்கு வெளியே வர முயலும்போது, என் முழு உடலும் பாறை படுக்கைகளில் உரசி காயப்படுகிறது.
ஆனால் நான் இந்த இடத்தினை மேலும் ஆராய்ந்து, வேறு ஏதும் பாறை ஓவியங்கள் உள்ளனவா எனதேடிப்பார்க்க வேண்டும்.

மீண்டும், அப்பகுதியில் ஒரு வேலியை நான் கண்டேன். எனவே நான் உள்ளே சென்றேன். இந்தக் குகை உறைவிடத்தில் நிச்சயம் சில ஓவியங்கள் இருக்க வேண்டும்.
நான் அப்பகுதிக்குள் நுழைந்தபோது, நான் பார்த்த முதல் ஓவியம் அதன் மீது தண்ணீர் தெளிக்காமலே தெளிவாய்த் தெரிந்தது.
ஒரு நீண்ட முகம் கொண்ட, பறவைமனிதன்போன்ற உருவம், ஒரு குதிரையின் மேல் அமர்ந்து இருப்பது போல் அமைந்து  இருந்தது.

மற்றொரு உருவம் வினோத முக அமைப்புடன், ஒரு குதிரையின் கடிவாளத்தைப் பற்றியவாறு இருந்தது.
மூன்றாவது உருவம் அவர்கள் இருவரிடம் விரிந்த கைகளுடன் பேசிக்  கொண்டிருந்தது.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மூன்று உருவங்களுமே  மனிதர்களைப்  போல் காட்சியளிக்கவில்லை. அவை நீட்டப்பட்ட முகத்துடன் கூர்மையான மூக்குடன் காட்டப்பட்டுள்ளன.
அவர்களை நீங்கள் பாம்பு மனிதர்கள் ஆகவோ அல்லது பறவை மனிதர்களாகவோ ஓவியத்தைப் பார்க்கும் கோணத்தைக்  கொண்டு  எண்ணிக்  கொள்ளலாம்.
உண்மையில் இவர்கள் தான் நாகர்கள்.

உள்ளூர் மக்கள், நாகர்கள் மிருகங்களை வளர்த்து மனிதர்களுக்கு மாடு வளர்ப்பு மற்றும் மற்ற விலங்குகளைப் பராமரிக்கும் முறைகளைக்கற்றுக் கொடுத்ததாக நம்புகிறார்கள்.
நடுவில் உள்ள உருவத்திற்கு இரண்டு ஆண்டெனா போன்ற கம்பிகள் அதன் தலையிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த நீட்சிகளுக்கு என்ன காரணம் இருக்க வேண்டும்?

நான் நீரை தெளிக்க, என்னால் பல ஓவியங்களைக் காண முடிந்தது. அவை நாம் பார்த்த மற்ற பாறைகளை விடத் தெளிவாகவும் இருந்தன.
தண்ணீரை தெளித்து அதன் மூலம் தெரியும் விஷயங்களைக் காண்பது ஓர் அற்புதமான வேலை. இதோ துப்பாக்கிக்  குறிசின்னம் அல்லது ஒரு சக்கரத்தின் நான்கு ஆரங்கள்.
நான் பல புராதன இந்திய பகுதிகளை உங்களுக்கு காட்டியுள்ளேன். ஆனால், இப்போது இந்தியாவின் கற்காலத்துஇடங்களும் அற்புதமாய்ப் பல்வேறு பாறை ஓவியங்களைக் கொண்டு இருப்பதைக் காண்கிறோம்.

இங்கு நாம் நான்கு நாகர்கள் நேராக ஒரே வரிசையில் நிற்பதை காண்கிறோம்.
அவர்கள் கைகளைப் பற்றி இருப்பதைப் போல் தெரிகிறது.
அவர்கள் என்ன செய்கிறார்கள்?
நாம் கவனமாய்ப் பார்த்தால், அவர்கள் சிறிய படகு அல்லது கையாக்கில் நின்று கொண்டு இருப்பதையும், அவர்களுள் ஒருவர் ஒரு நீண்ட கம்பை, படகை கட்டுப்படுத்தும் துடுப்பாய் பயன்படுத்துவதையும் பார்க்க முடிகிறது.

உள்ளூர்மக்கள் நாகர்கள் தான் அவர்களுக்குக் கடல்கள் மற்றும் ஆறுகளில்  பயணம் செய்யக் கற்றுக் கொடுத்தார்கள் என நான்உங்களிடம் முன்பு கூறியிருந்தது நினைவில் இருக்கிறதா?
ஆம், அந்தக் கதைகள் அனைத்தும் உண்மையே.
ஆனால், மேலும் அட்டகாசமான வேறொன்றும் உள்ளது.

இந்த ஓவியத்தைப் பாருங்கள். இது ஒரு சிக்கலான குறியீடாக இப்படிப் பார்த்தால் தெரிகிறது. ஆனால் இதனைத் தொன்னூறு கோணங்கள் திருப்பினோமேயானால் நம்மால் மேலும் ஆச்சரியமான சிலவற்றைப்  பார்க்க முடியும்.
அது ஒரு இரண்டு ப்ரொபெல்லர்களைக் கொண்ட படகு!

இது நம்ப முடியாதது. ஏனென்றால் இந்தத் தொழில்நுட்பத்தை நாம் இன்று தான் பயன்படுத்துகிறோம். மேலும் அவற்றை நாம் மிகவும் உயர் தொழில்நுட்பம் ஆக கருதுகிறோம்.
பழங்காலத்து மனிதன் அத்தகைய உயர்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்க வாய்ப்பே இல்லை. நினைத்துப் பாருங்கள். பயணக்  கருவியின் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த மனிதன், குகைகளில் வாழ்ந்து இருப்பானா?

அவர்கள், வேறொருவர் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்க வேண்டும்.
அகழ்வாய்வாளர்கள் குகை ஓவியங்களுக்கு ஒரு தர்க்க  ரீதியான விளக்கத்தை வைத்துள்ளனர்.
ஆதி மனிதன் பசுக்களைப் பார்த்ததால் அவற்றை ஓவியங்களாக வரைந்தான் என்று வாதிடுகிறார்கள். அதனால் தான் நாம் மிருகங்களின் ஓவியங்களைப் பார்க்கிறோம்.
ஆனால் அதே அகழ்வாய்வாளர்கள் இத்தகைய உயர் தொழில்நுட்பத்தைக் காணும் போது முன்பு கூறிய கொள்கையை முற்றிலும் மறுப்பர்.

பறக்கும் தட்டு, வேற்று கிரகத்தினர் அல்லது ப்ரொபெல்லர்களைக் கொண்ட படகு ஆகியவற்றைக் காணும் போது அதே தர்க்கத்தை முழுவதுமாக மறுக்கின்றனர்.
அவர்கள் உடனே, இவை அனைத்தும் குகை மனிதனின் கற்பனையில் இருந்து தோன்றியவை என வாதிடுகின்றனர்.
அவர்களுக்கும் வேறு வழியில்லை. ஏனெனில், அவர்கள் கடவுள், வேற்றுகிரகத்தவர் அல்லது சில உயர் தொழில்நுட்பம் குறித்துப் பேசினால், அரசாங்கத்திடமும் தங்களது சமுதாயத்திடமும் இருந்து பெரிய சங்கடங்களை அனுபவிக்க வேண்டிவரும்.
இங்கு நாம் பல்வேறு வினோத உருவங்களைக் காண முடிகிறது.
ஒன்று,1980-களின் தொலைக்காட்சி ஆண்டெனா போன்று காட்சியளிக்கிறது.

இது சிவனின் உடுக்கை போல் தெரிகிறது.
அடுத்தது, ஆங்கில எழுத்து 'எம்' வடிவத்திலும் ,பின்னால் உடுக்கையும் இடம் பெற்றிருந்தது.
கடைசியில் வட்டத்தின் நடுவே 'எக்ஸ்' குறியீடு, துப்பாக்கிக்குறி போல் காட்சியளித்தது.
இந்தச் சின்னங்கள் ஏதோ முக்கியமான ஒன்றை குறிக்க வேண்டும். அதனை உங்களால் விளக்கமுடியுமா?
இதோ ஒரு வட்டத்திலிருந்து ஏராளமான கோடுகள் வெளி வருகின்றன.
அது ஒரு சுழலும் சக்கரம் போலத் தெரிகிறது. அது சூரியனாகவோ, சந்திரனாகவோ அல்லது வெளிச்சத்தை வெளியேற்றும் பறக்கும் தட்டாகவோ கூட இருக்கலாம்.
இவை அனைத்தும் அனுமானங்களே. ஏனெனில் இந்த வரைபடம் பொதுத்தன்மையுடன் எந்த குறிப்பிட்ட அம்சங்களையும் உள்ளடக்காமல் அமைக்கப்  பெற்றுஉள்ளது.

இறுதியாக, ஒரு மிகவும் விசித்திரமான உருவம் உள்ளது.
அதற்கு நீட்டமான முகம். நாம் மற்ற நாகர்களுக்குப் பார்த்ததைப் போல் உள்ளது.
அதனோடு அதன் தலையில் இருந்து கம்பி போன்ற நீட்சிகள் வெளிவருகின்றன.
இது மிகவும் சுவாரசியமாக உள்ளது. ஏனெனில் அவை உண்மையிலேயே ஆண்டெனாக்களா அல்லது சிகை அலங்காரமா என்பது நமக்குத் தெரியாது.
நாகர்கள் பலருக்குப் பாம்பு போன்ற தலைப்பகுதியும் அதன் மீது நீண்ட அமைப்புகளும் இருப்பதை முன்பு  பார்த்தோமல்லவா?

அந்தச் சித்தரிப்புகளின் முன்னோடிகள் தான் இவையா என்பது நமக்குத் தெரியாது.
சென்ற அத்தியாயத்தில் நாம் கல் குடில்களையும் பழங்காலத்து டால்மன்களையும் நாகர்கள் கட்டியதாக உள்ளூர் மக்கள் கூறியதை பார்த்தோம்.
மேலும் அவர்கள் என்னிடம் நான் நாகர்களைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள ராட்சச பிளவு பாறைகளைக் கண்டுப்பிடிக்க வேண்டும் எனக் கூறி இருந்தார்கள்.

 அது போல், நாம் இங்குச் சில முக்கியமானஓவியங்களைப் பார்த்து உள்ளோம். ஒன்று பார்ப்பதற்கு ஒரு பறக்கும் தட்டு போலவும், அதனுள் வேற்று கிரக ஜீவராசிகள் இருப்பது போலவும் காட்சியளிக்கிறது.
மிக முக்கியமாக நாம் பறவைகளைப் போன்ற நீண்ட முகஅமைப்பைக் கொண்ட நாகர்களையும் அவர்களின் இறக்கை போன்ற கைகளையும் பார்த்தோம்.
பல முறை நாகர்கள் இறக்கைகளோடும் பறக்கும் திறன் பெற்றவர்கள் ஆகவும் சித்தரிக்கப்பட்டிருப்பதை நினைவில் வைத்துள்ளீர்களா?

நாம் வாலையர்அல்லது நாகர்களை ஓவியங்கள் ஆகப் பார்த்துள்ளோம். ஆனால், அகழ்வாய்வாளர்களும் வரலாற்றாளர்களும் இந்தப் பறவை மனிதர்களைச்சாதாரண மனிதர்களாகவே விவரிக்கின்றனர்.
அவர்கள் அதிநவீன தொழில்நுட்பங்களான ப்ரொபெல்லர்களைப் பயன்படுத்தி இருந்தாலும் வல்லுநர்கள் அவற்றைத் தொடர்ந்து மறுப்பதுடன் அவர்கள் மனிதர்களே என வாதிடுகிறார்கள்.
இந்த உருவங்கள் உண்மையிலேயே கடவுள்களா? அதற்கு இந்தக் குகை ஓவியங்களைத் தவிர வேறு சில உறுதியான ஆதாரங்களும் நமக்குத் தேவைப்படுகின்றன.

இல்லையேல், இந்த ஆதாரங்கள் அனைத்தையும் ஒன்று கோர்க்க முடியாது.
இவை தான் உண்மையான நாகர்களா?
 சில உறுதியான ஆதாரங்களைப் பெற, நான் மறுபடியும் தேட தொடங்க வேண்டும். இப்பகுதியில் காணப்படும் ஒரு சில புதிய ஆதாரங்களையும் கண்டறிந்து இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க வேண்டும்.
நான் என்ன கண்டுப்  பிடிப்பேன்?
அது தெய்வங்கள் இருப்பதை உறுதிப்படுத்துமா?

நான் பிரவீன் மோகன், இந்தக்  காணொளியைப் பார்த்ததற்கு மிகவும் நன்றி. இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்ய மறந்து விடாதீர்கள். உங்களுடன் மிக விரைவில் பேசுகிறேன், வருகிறேன்!

Comments